2012ம் ஆண்டுக்குள் ஓகனேக்கல் திட்டம் நிறைவேறும்-ஸ்டாலின் உறுதி
மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பல்வேறு பணிகளை அவர் ஆய்வு செய்தார். ஓகனேக்கல் திட்டம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு, தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கான ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
இத் திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள் ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் ரூ.1,928 கோடி மதிப்பீட்டில் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 2012ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் திட்டப் பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டார். இன்று மீண்டும் அவர் ஆய்வு செய்தார்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.3 கோடியே 15 லட்சம் செலவில் சமநிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை தர்மபுரி நகராட்சி அம்பேத்கர் காலனியில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திட்டத்திற்காக 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணியை நல்லம்பள்ளி ஒன்றியம் சவுளூர் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பென்னாகரம் சென்ற ஸ்டாலின், அங்கு பேருந்து நிலையத்தில் நடைபெறும் ரூ. 4 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் பேருக்கு குடிநீர் வழங்கும் பென்னாகரம் பேரூராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் செயல் பாட்டையும் தொடங்கி வைத்தார்.