ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்: இளங்கோவன் வேண்டுகோள்
ஆலங்குளம்: ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலங்குளத்தில் காமராஜர் மக்கள் பேரவை மற்றும் கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. இதற்கு பேரவை தலைவர் ராஜா தலைமை வகித்தார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. பழனிசாமி, மாநில காங்கிரஸ் செயலாளர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்ட வழிகாட்டுதலின்படி இன்று இந்தியா முழுவதும் 12 கோடி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இன்று எல்லோரும் கல்வி கற்கும் நிலைக்கு வித்திட்டவர் காமராஜர். ரூ.100 கூலி திட்டத்தில் ரூ.30 வரை சுரண்டப்படுகிறது. இதை அபகரிப்பவர்களை கண்டுபிடித்து தமிழக அரசு தண்டிக்க வேண்டும்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடப்பதாக முதல்வர் கூறி வரும் வேளையில் ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என போராடியதால் கைது செய்யப்பட்ட தியாகி சுடலைமுத்துவையும், சிவாஜி மன்ற தலைவர் முத்துகுமரனையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மேலும், ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் எனது வேண்டுகோளை முன் வைக்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications