கடல் அட்டைகள், கடல் சங்குகள் கடத்தல்: 5 பேர் கைது
தூத்துக்குடி: இலங்கையில் இருந்து கடல் சங்குகளை தமிழகத்திற்கும், தூத்துக்குடியில் இருந்து கடல் அட்டைகளை இலங்கைக்கும் கடத்திய கும்பலை ஏழாம் தீடை பகுதியில் இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்தனர்.
தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கும், அங்கிருந்து தமிழக பகுதிகளுக்கும் நடக்கும் சட்டவிரோத கடத்தல் சம்பவங்களை தடுக்க இரு நாட்டு கடற்படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினர் ஏழாம் தீடை பகுதியில் ரோந்து கப்பலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை கடத்திய நாட்டு படகு சிக்கியது. படகில் இருந்த 3 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதே போல் இலங்கையில் இருந்து இரு பைபர் படகுகளில் இந்தியாவுக்கு கடல் சங்குகள் கடத்தப்பட்டது.
இரு பைபர் படகுகளையும் இலங்கை கடற்படையினர் மடக்கி, அதில் இருந்த இருவரை கைது செய்தனர். மூன்று படகுகள், அதில் இருந்த கடல் அட்டைகள் மற்றும் கடல் சங்குகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் விசாரணைக்காக இலங்கைக்கு அழைத்து சென்றனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நாட்டு படகில் கடல் அட்டைகளை கடத்தியது யார் என தமிழக புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications