திருமண நிகழ்ச்சியில் பெண்களை செல்போனில் படம் பிடித்த விவகாரம்: வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் இளம்பெண்களை செல்போனில் படம் பிடித்ததை தட்டிகேட்ட வாலிபரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில் காயிதே மில்லத் 2-வது தெருவை சேர்ந்தவர் அக்பர். இவரது மகளின் திருமணம் கடந்த 15-ம் தேதி நடந்தது. திருமண விழாவிற்கு வந்த இளம்பெண்களை சில வாலிபர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
இதை திருமணத்திற்கு வந்த இரும்பு வியாபாரி சாகுல் ஹமீது தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்த நிலையில், சாகுல் ஹமீது தாக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த காயிதே மில்லத் 1-வது தெருவை சேர்ந்த ஜியா உல்ஹக், சதாம் உசேன், யூசுப், புது முதலாம் தெருவை சேர்ந்த பீர்மைதீன், 2-ம் தெருவை சேர்ந்த தாஹீர், இஸ்மாயில் என்பவரின் மனைவி செய்யது அலி பாத்திமா ஆகிய 6 பேர் நேற்று சாகுல் ஹமீதை சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைக்குமார் விசாரணை நடத்தி ஜியா உல்ஹக், சதாம் உசேன், பீர்மைதீன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.