விலைவாசி குறித்த கருணாநிதியின் பதில் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகும்-ஜெ.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், விலைவாசி உயர்வுக்கும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் மத்திய அரசு தான் பொறுப்பு என்றும், மத்திய அரசை நடத்தும் காங்கிரஸைப் பற்றி நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். கருணாநிதியின் இது போன்ற பதில் தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிப்பதாக உள்ளது.
மத்திய கூட்டணி அரசின் அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகிப்பதோடு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்விற்கும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. இதை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரே தெரிவித்து இருக்கிறார். இதற்கு மறுப்பையும் கருணாநிதி இது நாள் வரை தெரிவிக்கவில்லை.
எனவே தான் விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர் விற்கும் தி.மு.க. அரசும் காரணம் என்று நான் குற்றம் சுமத்தினேன். அதே சமயத்தில் விலைவாசி உயர்வுக்கும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமான மத்திய அரசையும் நாங்கள் கண்டித்து இருக்கிறோம்.
எனது ஆட்சிக் காலத்திலும் விலைவாசி உயர்ந்து இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக கருணாநிதி ஒரு புள்ளி விவரத்தை அளித்து இருக்கிறார். உதாரணமாக 2001 ஆம் ஆண்டு பொன்னி புழுங்கல் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு 14 ரூபாய் என்று இருந்ததாகவும், 2005 ஆம் ஆண்டு 20 ரூபாய் அளவிற்கு உயர்ந்துவிட்டதாகவும் கருணாநிதி கூறியிருக்கிறார்.
எனது ஆட்சிக் காலத்தில் அதிகபட்சமாக பொன்னி புழுங்கலரிசியின் விலை கிலோ 17 ரூபாய் என்ற அளவில் தான் விற்கப்பட்டது. ஆனால் தற்போது பொன்னி புழுங்கலரிசியின் விலை கிலோ 44 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதாவது, 2 மடங்குக்கும் மேலாக உயர்ந்துவிட்டது!
இதே போன்று துவரம் பருப்பு 2001 ஆம் ஆண்டு 27 ரூபாய் என்று இருந்ததாகவும், 2004 ஆம் ஆண்டு 33 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். எனது ஆட்சிக் காலத்தில் அதிகபட்சமாக துவரம் பருப்பு ஒரு கிலோ 28 ரூபாய் என்ற அளவில் தான் விற்கப்பட்டது.
கருணாநிதியின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் 99 ரூபாய் என்ற அளவுக்கு விற்கப்படுகிறது. அதாவது மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்ந்துவிட்டது. நல்லெண்ணெயின் விலை 2001 ஆம் ஆண்டு 34 ரூபாயாக இருந்ததாகவும், எனது ஆட்சிக் காலத்தில் 65 ரூபாயாக உயர்ந்ததாகவும் கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார்.
எனது ஆட்சிக் காலத்தில் நல்லெண்ணெயின் விலை அதிகபட்சமாக ஒரு கிலோ 60 ரூபாய் அளவுக்கு தான் விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ நல்லெண்ணெயின் விலை 134 ரூபாய்! அதாவது இரண்டு மடங்குக்கு மேல் உயர்வு! இதே போல் தான் மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.
எனது ஆட்சிக் காலத்தில் சர்க்கரை விலை கிலோ 12 ரூபாய் 50 காசு என்ற அளவில் இருந்தது. அதாவது, ரேஷன் கடைகளில் விற்கப்பட்டதை விட ஒரு ரூபாய் குறைவாக வெளிச்சந்தைகளில் விற்கப்பட்டது.
இதை கருணாநிதி தன்னுடைய புள்ளி விவரத்தில் குறிப்பிடவில்லை. தற்போது சர்க்கரையின் விலை ஒரு கிலோ 35 ரூபாய். கருணாநிதியால் அளிக்கப்பட்ட புள்ளி விவரங்களில் இருந்தே எனது ஆட்சிக் காலத்தில் விலைவாசி கட்டுக்குள் இருந்துள்ளது என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
இதே போன்று, 10 மளிகைப்பொருட்கள் அடங்கிய பொட்டலம் 50 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருவதாக கருணாநிதி தெரிவித்து இருக்கிறார். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு சில கடைகளில், சில நாட்கள் மட்டுமே வழங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் தரமற்று இருந்ததும், இந்தத்திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை
எனது ஆட்சிக் காலத்தில் சாதாரண உணவகங்களில் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சாப்பாடு தற்போது 50 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதை வைத்தே, கடந்த நான்கு ஆண்டுகளில் விலைவாசி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications