இறையாண்மைக்கு எதிரான பேச்சு-வைகோ மீதான வழக்கு ஒத்திவைப்பு
சென்னை: நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆஜராகாததை தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 20.10.2008ம் தேதி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற "ஈழத்தில் நடந்தது என்ன?'' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் வைகோ பேசினார்.
அதில், தனி தமிழ்நாடு வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அவர் பேசிய பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி மாநில க்யூ பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
வைகோ மீது க்யூ பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று வைகோ மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வைகோ நேரில் ஆஜராகவில்லை.
(மதிமுகவின் அங்கீகாரம் குறித்து தேர்தல் கமிஷன் விசாரணை நடத்துவதால் அதில் பங்கேற்க வைகோ டெல்லி சென்று விட்டார்.)
வைகோ டெல்லியில் இருப்பதால் விசாரணையில் கலந்து கொள்ள முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தேவதாஸ் மனு தாக்கல் செய்தார். அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அதே நேரத்தில் நீதிமன்றம் குறிப்பிடும் இன்னொரு தேதியில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி பூபாலன், விசாரணையை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று வைகோ மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும்.
இந்த வழக்கில் முன்னர் அப்போது மதிமுகவில் அவைத் தலைவராக இருந்த கண்ணப்பன் மீதும் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், பின்னர் கண்ணப்பன் திமுகவுக்குத் தாவி விட்டதால் நீதிமன்றத்தில் வைகோ மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கலானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications