மகாராஷ்டிராவில் கைதான சந்திரபாபு நாயுடு மீதான வழக்குகள் வாபஸ்-ஹைதராபாத் திரும்பினார்
மகாராஷ்டிர மாநிலம் கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாப்லி அணையிலிருந்து மகாராஷ்டிரா அதிக அளவில் தண்ணீரை எடுப்பதாக கூறிய நாயுடு தனது கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுடன் மகாராஷ்டிராவுக்கு படையெடுத்தார்.
ஆனால் எல்லையிலேயே அனைவரையும் தடுத்து நிறுத்திக் கைது செய்தது மகாராஷ்டிர அரசு. பின்னர்அனைவரையும் தர்மாபாத் ஐடிஐ வளாகத்தில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில் நேற்று அங்கு புகுந்த மகாராஷ்டிர போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றி அவுரங்காபாத் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து ஆந்திராவில் பெரும் பதட்டம் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்த மகாராஷ்டிர அரசு நாயுட உள்ளிட்டோர் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது. இதையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தனி விமானத்தை வரவழைத்து நாயுடு உள்ளிட்டோரை அதில் ஏற்றி நேற்று இரவு ஹைதராபாத் கொண்டு வந்து விட்டது மகாராஷ்டிர அரசு.
விமான நிலையத்தில் அவர்களை நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். பெரும் திரளான தெலுங்கு தேசம் தொண்டர்களும் திரண்டு வந்திருந்தனர். அனைவரும் காங்கிரஸ் கட்சியையும் மகாராஷ்டிர அரசையும் கண்டித்து கோஷமிட்டனர்.