புதுவை குழந்தைகள் கடத்தல் வழக்கு: போலி சான்றிகழ் வழங்கிய டாக்டர் சரண்
புதுச்சேரி: புதுச்சேரி குழந்தைககள் கடத்தல் வழக்கில் போலி சான்றிதழ் வழங்கிய புதுச்சேரி டாக்டர் நெல்லியான் போலீசில் சரண் அடைந்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தைகள் கடத்தல் வழக்கில் தலைவி போல செயல்பட்டு புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த லலிதா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து புதுவை சமூக நலத்துறை அதிகாரிகள் லலிதாவின் வீட்டை சோதனை செய்த போது வித்யாபாரதி, தேவதர்ஷன் என்ற 2 குழந்தைகளை மீட்டனர். மீட்கப்பட்ட 2 குழந்தைகளையும் புதுவை அரியாங்குப்பம் அருகில் உள்ள இமாகுலேட் ஜாய் ஹோம் குழந்தைகள் காப்பகத்தில் அதிகாரிகள் சேர்த்தனர்.
இந்த 2 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை சோதனை செய்த அதிகாரிகள் அவை போலி என்றும், அவற்றை முதலியார்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வரும் டாக்டர் நெல்லியான் என்பவர் அளித்துள்ளார் என்பதையும் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக டாக்டர் நெல்லியான், கிளினிக் மானேஜர் மதியழகன், லலிதா ஆகியோர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மானேஜர் மதியழகன் கைது செய்யப்பட்டார். டாக்டர் நெல்லியான் தலைமறைவாகிவிட்டார்.
இந் நிலையில் நெல்லியான் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
உடனே நெஞ்சு வலி!
சரணடைந்த பின்னர் உடனடியாக டாக்டர் நெல்லியானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications