வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம்

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் 3 லட்சம் ஏக்கர் பரப்பிலான குறுவை சாகுபடி பயிர்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
ஜுன் 12ம் தேதியில் மேட்டூர் அணையில் குறைந்தது 50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்துக்காக நீரைத் திறந்துவிட முடியும்.
ஆனால், கடந்த ஆண்டு இந்தத் தேதியில் 23 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே அணையில் இருந்தது. இதனால் குறிப்பிட்ட நாளில் தண்ணீரை திறந்துவிட முடியவில்லை.
அதே போல இந்த ஆண்டும் போதிய அளவு நீர் இல்லாததால் கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
93.4 டி.எம்.சி. மொத்த கொள்ளவு கொண்ட மேட்டூர் அணையில் இப்போது 44 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது.
இதனால் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாகப்பட்டிணம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில், பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள் பாதிக்கப்ட்டுள்ளன.
தற்போது, குடிநீருக்காக மட்டும் தினமும் ஆயிரம் கன அடி நீர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு வருகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை வழக்கமாகவே தட்டி் கழித்து வரும் கர்நாடகம், தனது அணைகள் நிரம்பி வழிந்த பிறகே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டது.
இந் நிலையில் தற்போது தனது அணைகளில் போதிய நீர் இல்லை என்று கர்நாடகம் கூறிவருகிறது.
1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவின்படி, கடந்த ஜுன் மாதத்தில் இருந்து இன்றைய தேதி வரை தமிழகத்துக்கு 40 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இதுவரை வெறும் 12 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழகத்துக்கு தரப்பட்டுள்ளது. இன்னும் 28 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகம் தர வேண்டியுள்ளது.
இது குறித்து முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழகத்தில் போதிய தண்ணீரின்றி காரிவி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பயிர்கள் வாடுகின்றன. எனவே, தமிழகத்துக்கு தரவேண்டிய 28 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
அதே போல புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வுக் கூட்டத்தையும் முதல்வர் கருணாநிதி நடத்தினார். அதில், பொதுப்பணித்துறை, விவசாயத்துறை அதிகாரிகளுடன் தற்போதைய தண்ணீர் இருப்பு, பயிர்களின் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications