For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிர் காக்கும் உயர் சிகிச்சை திட்டம்-ஓராண்டில் 1.53 லட்சம் பேர் பலன்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான 'கலைஞர் காப்பீட்டு திட்டத்தின்' கீழ் கடந்த ஓராண்டில் 1.53 லட்சம் பேருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கும், பயன்பெற்ற நோயாளிகளுக்கும் முதல்வர் கருணாநிதி இன்று பரிசுகளை வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

முதல்வர் கருணாநிதி ஏழை-எளியவர்கள், தொழிலாளர்கள் முதலான நலிந்த குடும்பங்களின் நலவாழ்வைக் கருதி, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்னும் புரட்சிகரமான திட்டத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். 23.7.2009 அன்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை மந்திரி குலாம்நபி ஆசாத்தால் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் 22.07.2010 அன்று ஒராண்டை நிறைவு செய்தது இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த ஓராண்டில் இதுவரை 1,44,45,117 குடும்பங்கள் இத்திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,33,60,439 குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 469 என்ற வீதத்தில் ரூ. 569.54 கோடி பிரீமியம் தொகையாகவும், ரூ. 58.66 கோடி சேவை வரியாகவும் காப்பீட்டு நிறுவனத்திற்குத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அறுவை சிகிச்சைகள் அளிப்பதற்காக 656 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இம்மருத்துவமனைகளில் 1,53,257 நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு முழுமையாக நலம் பெற்றுள்ளனர். இதற்காக காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு ரூ. 415.43 கோடி வழங்கப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் தேவைப்படும் நலிந்த, ஏழை, எளியோர் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்போர் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் பாராட்டும் இத்திட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இத்திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு நோய் குணமடைந்து, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர்களுக்கு முதல்வர் கருணாநிதி இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் பரிசுகள் வழங்கி வாழ்த்து கூறினார்.

மேலும், இத்திட்டத்தின் வெற்றிக்காகச் சிறப்பாகப் பணியாற்றி அதிக அளவில் நோயாளிகளுக்குச் சிகிச்சைகள் அளித்துள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் நற்சான்றிதழ்களை வழங்கி, அம்மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், திட்டத்தின் வெற்றிக்குப் பாடுபடும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்குப் பாராட்டு தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X