முல்லைப் பெரியாறு அணையை மத்திய அரசு ஏற்க வேண்டும்: விஜயகாந்த்
சென்னை: முல்லைப் பெரியாறு அணையை மத்திய அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு இல்லாதது என்று நீண்டகாலமாக கேரள அரசு கூறி வருகிறது. அணை உள்ள பகுதி பூகம்ப பாதிப்பு ஏற்படும் பகுதி என்றும் கூறியது.
இந்நிலையில், அணைக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக கேரள மாநில மின்துறை அமைச்சர் அண்மையில் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை தமிழகத்தின் பொறுப்பில் இருந்து விடுவித்து, தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் கேரளத்துக்கு உள்ளது.
எனவே, சிலர் அணைக்கு ஆபத்தை விளைவித்து, ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பின் மீது பழியை சுமத்த வாய்ப்புள்ளது.
முல்லைப் பெரியாறு தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பயன்படும் நதியாகும். எனவே, இரு மாநில மக்களின் நல்வாழ்வு, அமைதி, நல்லுறவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு முல்லைப் பெரியாறு அணையை மத்திய அரசு தனது சொந்தப் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications