கும்பாவுருட்டி பலாத்கார விவகாரம் : விசாரணை அதிகாரி மாற்றம்
செங்கோட்டை: கும்பாவுருட்டி அருவியில் தமிழக பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கொல்லம் டி.எஸ்.பி. வரதராஜன் இவ்வழக்கை விசாரிக்க உள்ளார்.
கேரள வனப்பகுதியில் உள்ள கும்பாவுருட்டி அருவிக்கு சுற்றுலா சென்ற தமிழக பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக மணிகண்டன், சாகுல் ஹமீது, உன்னி கிருஷ்ணன் ஆகிய 3 கேரள வனத்துறை வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்.
இவர்களை காப்பாற்ற ஆளும் கட்சி பிரமுகர்கள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை குழத்துபுழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ் விசாரித்து வந்தார். இவருடைய காவலில் இருந்த 3 பேரும் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினர். பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் விசாரணை பொறுப்பில் இருந்து சந்தோஷ்குமார் நேற்று திடீரென மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக கொல்லம் போதை பொருள் கண்காணி்ப்பு டி.எஸ்.பி. வரதராஜன் தலைமையில் விசாரணை நடைபெறும் என கேரள வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், குற்றவாளிகளை காப்பாற்ற எந்த அரசும் முயற்சிக்கவில்லை. முதல் கட்ட விசாரணை முடிந்து விட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தந்தால் மட்டுமே மேற்கொண்டு விசாரணை நடத்த முடியும் என்றார். இதற்கிடையே புனலூர் வனத்துறை பறக்கும்படை அதிகாரி நேற்று செங்கோட்டைக்கு வந்து தமிழக வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.