For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமரின் விருந்து-குஜராத் விவகாரத்தால் புறக்கணித்த பாஜக

By Chakra
Google Oneindia Tamil News

Arun Jaitley and Sushma Swaraj
டெல்லி: எதிர்க் கட்சிகளுக்கு இன்று பிரதமர் வழங்க இருந்த மதிய விருந்தை பாஜக புறக்கணித்துவிட்டது. இதையடுத்து இந்த விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

வரும் 26ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் அணு விபத்து இழப்பீட்டு மசோதா, பெண்கள் இட ஒதுக்கீடு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது ஆகிய மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக எதிர்க் கட்சிகளுடன் விவாதிக்க இந்த மதிய விருந்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், போலி என்கெளண்டர் விவகாரத்தி்ல் குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான பிடியை சிபிஐ இறுக்கியுள்ளதால் இந்த விருந்தை பாஜக புறக்கணித்துவிட்டது.

அமித் ஷா எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலையில், சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இன்று நிருபர்களிடம் பேசிய அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறினர்.

இதன் காரணமாகவே மதிய விருந்தை புறக்கணிப்பதாகவும் அறிவி்த்தனர்.

இதையடுத்து விருந்தை பிரதமர் ரத்து செய்துவிட்டார்.

10 மாநில முதல்வர்கள் கூட்டமும் ரத்து:

இந் நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற இருந்த 10 மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில், விலைவாசியை கட்டுப்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது.

நரேந்திர மோடி தலைமையிலான இந்தக் குழுவில் தமிழ்நாடு, ஆந்திரா, பிகார், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் கூட்டம் இன்று நடப்பதாக இருந்தது. இதற்காக முதல்வர் கருணாநிதிக்குப் பதிலாக துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றார்.

ஆனால், தொடர் மழையால் குஜராத் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இந்தக் குழுவின் தலைவரான நரேந்திர மோடி தனது டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்து விட்டார். இதையடுத்து இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நாளை திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X