புரோக்கர் மூலம் முன்பதிவு ரயில் டிக்கெட்: 4 பேர் சிக்கினர்
நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் புரோக்கர்கள் மூலம் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதால் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் சென்றுள்ளன. மேலும், தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் திண்டாடிய தகவலும் கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து நெல்லை சந்திப்பில் உள்ள ரயில்வே முன்பதிவு கவுன்டர்கள், பாளையங்கோட்டை வார்டு அலுவலகத்தில் உள்ள முன்பதிவு கவுன்டர்களில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், அவினேஸ் குமார், ராமையா உள்ளிட்ட போலீசார் இன்று காலை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அதிகாலையிலேயே வந்து கவுன்டர் முன்பு பழைய செருப்பு, கற்கள் வைத்து இடம் பிடித்து கூடுதலாக டிக்கெட் எடுத்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிரடி சோதனையை முன்கூட்டியே அறிந்த சில புரோக்கர்கள் தப்பி ஓடி விட்டாதக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று காலை நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.