பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் காதலா-அசாருதீன் மறுப்பு

47 வயதாகும் அசாருதீனுக்கும், 26 வயதாகும் ஜூவாலாவுக்கும் இடையே நெருக்கமான காதல் மலர்ந்துள்ளதாம். ஜூவாலா ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமிக்கு பயிற்சி எடுக்க வரும்போது அங்கு அசாருதீனும் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. பல நேரங்களில் ஜூவாலாவும், அசாருதீனும் சேர்ந்து வெளியே போவதாகவும், ஹோட்டல்களுக்குப் போவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்தக் காதல் காரணமாக, இன்னும் ஒரு வாரத்தில் அசாருதீன் தனது மனைவி சங்கீதா பிஜ்லானியை விவகாரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஜூவாலா ஏற்கனவே திருமணமானவர். அவரது கணவர் சேத்தன் ஆனந்த். இவரும் பேட்மிண்டன் வீரர்தான். இருப்பினும் இவர்களுக்குள் மன ஒற்றுமை இல்லாததால் தனித் தனியாகவே வசித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் அசாருடன் இணைந்து ஜூவாலா குறித்த செய்திகள் காட்டுத் தீ போல பரவியுள்ளன.
ஆனால் அசாருதீன் இதை திட்டமிட்ட வதந்தி என்று கூறியுள்ளார். மொராதபாத் காங்கிரஸ் எம்.பியான அசாருதீன் இதுகுறித்துக் கூறுகையில், அனைத்தும் அடிப்படையற்ற, கற்பனைக் கதை. மிக மோசமான உள்நோக்கத்துடன் இது பரப்பப்பட்டுள்ளது.
ஜூவாலா எனது நல்ல தோழி, அவ்வளவுதான். மற்றபடி நான் அவரைக் காதலிப்பதாகவும், அவரைக் கல்யாணம் செய்யப் போவதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை.
இந்த செய்தியால் நான் காயமுற்றுள்ளேன். ஜூவாலாவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். எனது நல்ல தோழி அவர்.
இந்திய பேட்மிண்டன் சங்கத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்தபோது அதை சிலர் விரும்பவில்லை. என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டனர். அவர்கள்தான் இந்த வதந்தியை கிளப்பி விட்டுள்ளதாக கருதுகறேன்.
முதலில் அவர்கள் அவர்களது ஒழுக்கம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். அவர்களது வீடுகள் முறையாக உள்ளதை என்பது குறித்துக் கவலைப்பட வேண்டும். பிறகு மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது குறித்து நினைக்க வேண்டும்.
ஜூவாலா நல்ல வீராங்கனை, நாட்டுக்கு பெருமைத் தேடித் தரும் வகையில் ஆடி வருபவர். நமது நாட்டுக்காக பல பட்டங்களை வென்றெடுத்தவர். அப்படிப்பட்டவரை இப்படிப்பட்ட சர்ச்சைக்குள் கொண்டு வராதீர்கள். அவரை விட்டு விடுங்கள் என்றார் அசாருதீன்.
இரட்டையர் பிரிவில் உலகின் 7வது நிலை வீராங்கனையாக இருப்பவர் ஜூவாலா. இவருடைய கணவர் சேத்தன் ஆனந்த்தும் தேசிய சாம்பியனாக இருக்கிறார்.
அசாருதீனுக்கு சங்கீதா 2வது மனைவி. அவருடைய முதல் மனைவி நெளரீன் மூலம் அசாருதீனுக்கு அசாவுதீன், அபாசுதீன் என இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெளரீனை விவாகரத்து செய்த பின்னர் அசாருதீன் சங்கீதாவை கல்யாணம் செய்தார். அப்போதும் பெரும் சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications