மும்பைப் பெண்களை சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்-இருவர் கைது
சென்னை: மும்பையிலிருந்து பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள ஒரு கெஸ்ட் அவுஸ் முதல் மாடியில் விபசார விடுதி இருப்பதாக சி.பி. சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனே டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு 3 பெண்கள் இருந்தனர். அவரக்ளில் ஒருவர் மும்பையை சேர்ந்த 17 வயதேயான சிறுமி. இவரை சினிமா ஆசை காட்டி ஒரு கும்பல் சென்னைக்குக் கூட்டி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த விபச்சார விடுதியை நடத்தி வந்த புரோக்கரான மதுராந்தகத்தைச் சேர்ந்த லட்சுமணனையும், அவரது உதவியாளரான கமலையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த லட்சுமணன் ஏற்கனவே பலமுறை கைதானவர். இருப்பினும் தொடர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீ்ழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
லட்சுமணனிடம் நடத்திய விசாரணையில் மேத்தா நகரில் நடத்தி வந்த விபச்சார விடுதி குறித்துத் தெரிய வந்தது. அங்கு நடத்திய சோதனையில் ஐந்து பெண்கள் சிக்கினர்.
பிடிபட்ட 8 பெண்களில் நான்கு பேர் 18 வயது கூட நிரம்பாதவர்கள். அனைவரையும் மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் போலீஸார் சேர்த்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சினிமா ஆசையில் மும்பையிலிருந்து இந்த கும்பலுடன் சென்னைக்கு வந்தவர்கள் ஆவர். அவர்களின் பெற்றோர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.