நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர்-புயல் வீசும்

நாளை தொடங்கும் இக்கூட்டத் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி வரை நடைபெறும்.
இக்கூட்டத் தொடரில் சோராபுதீன் வழக்கில் சிபிஐயை காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக பயன்படுத்துவதாக கூறி பிரச்சினையைக் கிளப்ப பாஜக தயாராகி வருகிறது.
அதேசமயம், விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றை எழுப்பி புயலைக் கிளப்ப இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டம் ஒழுங்கு, நக்சலைட் பிரச்சினை ஆகியவையும் புயலைக் கிளப்பும்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மீதான ஊழல் புகாரை ராஷ்டிரிய ஜனதாதளம், பாஸ்வானின் லோக் ஜன சக்தி ஆகியவை கிளப்பும் எனத் தெரிகிறது.
மகாராஷ்டிர மாநிலத்துடனான எல்லைப் பிரச்சினையை கர்நாடக உறுப்பினர்கள் கிளப்பலாம்.
பாப்லி அணை விவகாரத்தை தெலுங்கு தேசம் கையில் எடுத்து ரகளையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
அதிமுக உறுப்பினர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாகவும், ராஜாவுக்கு எதிராகவும் புயலைக் கிளப்பலாம்.
ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜிக்கு எதிராக இடதுசாரிகள் பெரும் பிரச்சினையை எழுப்ப தயாராகி வருகின்றன. தொடர்ந்து நடந்து வரும் ரயில் விபத்துக்களை பெரும் பிரச்சினையாக்க அவை திட்டமிட்டுள்ளன.
இப்படி ஒவ்வொரு எதிர்க்கட்சியும் ஒவ்வொரு பிரச்சினையுடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தத் தயாராக உள்ளதால் கூட்டத் தொடர் முழுவதும் அமளிக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
மொழிப் பிரச்சினையால் இதுவரை லோக்சபா, ராஜ்யசபா கூட்டங்களுக்கு சரிவர வராமல் இருந்து வந்த மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரிக்கு தற்போது தீர்வு காணப்பட்டு விட்டதால் அவர் நாளை தொடங்கும் கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications