தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியை ஏற்க அஞ்சும் ஐஏஎஸ் அதிகாரிகள்
சென்னை: தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியை ஏற்க விரும்பாமல் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஓடுகிறார்களாம். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் அவர்களை இப்படி ஓட வைக்கிறதாம்.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம்தான் நியமிக்கிறது. இருப்பினும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிதான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார்.
தற்போது இப்பதவியில் இருக்கும் நரேஷ் குப்தா படு நேர்மையானவர். யாருக்கும் அஞ்சாதவர். சரி என்று பட்டதை மட்டுமே செய்கிறார். ஆள் பார்க்க சாது போலத் தெரிந்தாலும் படு உறுதியான அவரது செயல்பாடுகள் அனைவரது பாராட்டுக்களையும் அள்ளிக் கொடுத்துள்ளன - அரசியல்வாதிகளைத் தவிர.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் குப்தா - அவரது நேர்மையான செயல்பாடுகளுக்காக. இருந்தாலும் தான் உண்டு, தனது பணி உண்டு என்று இருந்து வருகிறார் குப்தா.
எப்படி ஒருகாலத்தில் டி.என்.சேஷன், இந்திய அரசியல்வாதிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்தாரோ அதேபோல தற்போது தமிழகத்தில் இருக்கிறார் நரேஷ் குப்தா.
நரேஷ் குப்தாவின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதையடுத்து அடுத்த தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது.
இதற்காக 3 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை அனுப்புமாறு தமிழக அரசுக்கு அது கோரியிருந்தது. அதன்படி 3 பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசும் அனுப்பி வைத்தது. ஆனால் அதை உடனடியாக நிராகரித்து விட்டதாம் தலைமைத் தேர்தல் ஆணையம். இதையடுத்து தற்போது புதிதாக ஒரு பட்டியலை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
அதேசமயம், இந்தப் பதவிக்கு வருவதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் அச்சப்படுகிறார்களாம். தமிழக அரசியல் நெருக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதே இவர்களின் அச்சத்திற்குக் காரணமாம். அதுவும் பொதுத் தேர்தல் வரவுள்ளதால் கண்டிப்பாக நெருக்குதல்கள் அதீதமாக இருக்கும் என்பதால் இந்தப் பதவியே வேண்டாம் என ஓடுகிறார்களாம்.
இதனால் நரேஷ் குப்தா இடத்தை நிரப்பப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் கூடியுள்ளது.