பள்ளி கட்டணம் குறையவே இல்லையே: பெற்றோர்கள் கவலை
சென்னை: அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், தமிழக அரசு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கல்வி கட்டணத்தை நிர்ணயித்தது. அந்த குழு தமிழகமெங்கும் பள்ளிகளை ஆய்வு செய்து, ஆய்வின் அடிப்படையில் குறிப்பிட்ட கல்வி கட்டண விகிதத்தை நிர்ணயம் செய்தது. இதற்கு பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்திருந்தது.
ஆனால், ஏராளமான தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் புகார் கொடுத்த பெற்றோர்களும், மாணவர்களும்ம் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி 5,500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மேல்முறையீடு செய்துள்ளன. இதையடுத்து நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளில் மீண்டும் ஆய்வு செய்து புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயக்கும் என்று அரசு அறிவித்திருந்தது.
அப்படி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் புதிய கட்டணம் பற்றி எந்த தகவலும் இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்படும் கட்டண பட்டியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பது பெற்றோர்கள் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications