போயஸ் கார்டனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அதிமுகவினர்
சென்னை: அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் செயலாளர் டாக்டர் வெங்கடேஷின் ஆதரவாளர்கள் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முன் முற்றுகையிட்டு போராட்டடும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியச் செயலாளராக இருந்தவர் தங்க பட்சாட்சரம். இவர் டாக்டர் வெங்கடேஷின் ஆதரவாளராம்.
சமீபத்தில் தங்க பஞ்சாட்சரம் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் அண்ணாமலை என்பவர் நியமிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க பஞ்சாட்சரம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் இன்று போயஸ் கார்டன் முன் திரண்டு முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாக்டர் மைத்ரேயன், மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கட்சித் தலைமைக்கு தவறான புகார் தந்து தன்னை பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக பஞ்சாட்சரம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின்போது மைத்ரேயன், சோமசுந்தரத்துக்கு எதிராக பஞ்சாட்சரத்தின் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதையடுத்து ஜெயலலிதாவின் உதவியாளர் பஞ்சாட்சரத்தையும், முக்கிய நிர்வாகிகளையும் அழைத்துப் பேசினார்.
அவர்கள் சொன்ன குறைகளைக் கேட்ட அவர் ஜெயலலிதாவிடம் அதை எடுத்துச் செல்வதாகக் கூறி அவர்களை கலைந்து போகச் சொன்னார்.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
சசிகலாவின் உறவினரான வெங்டஷிடம் இருந்து 3 மாவட்டப் பொறுப்பாளர் பதவிகளை ஜெயலலிதா சமீபத்தில் பறித்தது குறிப்பிடத்தக்கது. அவரது இளம்பெண்கள்-இளைஞர்கள் பாசறைச் செயலாளர் பதவியும் விரைவில் பறிபோகலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications