கடவுள் நம்பிக்கை இருந்தா போலீஸ், காவல்துறை தேவையில்லை-துணை சபாநாயகர்
சேலம்: கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தால், போலீஸ் தேவையில்லை. போலீஸ் தேவைப்படாவிட்டால் காவல்துறையும் தேவையில்லை என்றார் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது வி.பி.துரைசாமி பேசுகையில், எல்லோருக்கும் கடவுள் பக்தி வந்துட்டா போலீசே தேவையிருக்காது. கடவுள் நம்பிக்கை இருந்துட்டா காவல்துறையே தேவையில்லை என்றார்.
இதைக் கேட்டதும் திமுகவினர் குழப்பமடைந்தனர். நாத்திக வழியில் வந்தவரான முதல்வர் கைவசம் காவல்துறை இருக்கும் நிலையில் கடவுள் நம்பிக்கை இருந்தால் போலீஸே தேவையில்லை என்று வி.பி.துரைசாமி பேசியதே இந்த சலசலப்புக்குக் காரணம்.
பின்னர் மைக்கைப் பிடித்த வீரபாண்டி ஆறுமுகம் இதை சமாளிக்கும் வகையில் பேசினார்.
அவர் கூறுகையில்,கோட்டை மாரியம்மன் தான் என்னை இங்கு அழைத்துவந்ததாக சொன்னார்கள். ஆனால் நான் மக்கள் அழைத்ததால்தான் வந்தேன்.
நாங்க பகுத்தறிவாளர்கள். எங்களுக்கு கோயில் விரோதம் கிடையாது. வழிபாடு சமமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதனால்தான் தலைவர், அனைத்து பிரிவினரும் அர்ச்சனை செய்யலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தார் என்று நாத்திகம் பேசி பேலன்ஸ் செய்து சமாளித்தார்.












Click it and Unblock the Notifications