பள்ளி விடுதியில் தூக்குப் போட்டு 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
வி.கே.புரம்: மணிமுத்தாறு அருகே பள்ளி விடுதியில் தூக்கு போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டியை சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் சஞ்சிவி. இவர் மணிமுத்தாறு அருகே செட்டிமேட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த சஞ்சிவி நேற்று காலை விடுதி அறைகதவை பூட்டி கொண்டு தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்த சக மாணவர்கள் அவரை மீட்டு சிவந்திபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருடைய நிலைமை மோசமடைந்ததால் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று மாலை சஞ்சிவி இறந்தார்.
இது குறித்து விகேபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், மகாலெட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர் தற்கொலைக்கான பிண்ணனி தெரிந்தது.
சஞ்சிவியின் தாய் சீதா ராமலெட்சுமி, இவருக்கு சித்தார்த் என்ற தம்பியும் உள்ளான். இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சீதாலெட்சுமி பல ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளை அழைத்து கொண்டு தனியாக பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்த சீதா லெட்சுமிக்கு அவர் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு முகமது உசேன் என்று பெயரிட்டனர்.
முதல் மற்றும் இரண்டாவது கணவருக்கு பிறந்த 3 குழந்தைகளையும் மணிமுத்தாறு அருகே உள்ள செட்டிமேட்டு தனியார் பள்ளியில் சேர்த்தனர். சகோதரர்கள் மூவரும் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
இந்நிலையில் சஞ்சிவிக்கு படிப்பில் நாட்டம் இல்லை. தந்தையை போல் கூலி வேலை செய்யப்போவதாக சக மாணவர்களிடம் கூறி வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.