ஜெர்மனிக்கான இலங்கை தூதர் நியமனத்தை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் வழக்கு
பெர்லின்: இலங்கையில், போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராணுவத் தளபதியை ஜெர்மனி நாட்டிற்கான தூதராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் தமிழர் அமைப்புகள் வழக்கு தொடர உள்ளது.
இது குறித்து சுவிஸ் ஈழத்தமிழர் அவையின் சட்ட விவகாரக்குழு இணைப்பாளரான செல்வி நிதிலா தெய்வேந்திரன் கூறியுள்ளதாவது,
சுவிஸ், நார்வே ஈழத்தமிழர் அவைகள், இன அழிப்புக்கெதிரான தமிழர் அமைப்பு எனும் அமெரிக்க அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து முதலாவது சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஜெர்மன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக போர்க்குற்றம் இழைத்த இலங்கை ராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் டயஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் குற்றமிழைத்து 4 மாதங்களே கழிந்த நிலையில் இலங்கை அரசு அவரை தூதராக நியமித்ததை ஜெர்மனி ஏற்றுக் கொண்டிருப்பதற்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட உள்ளது.
சுவிசர்லாந்து, நார்வே ஆகிய இரண்டு நாடுகளிலும் சுமார் 60,000 புலம் பெயர் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த இரு நாடுகளில் வாழும் தமிழர்கள் சார்பில் சுவிஸ் ஈழத்தமிழர் அவை, நார்வே ஈழத்தமிழர் அவை ஆகியவை அமெரிக்காவைச் சேர்ந்த இன அழிப்புக்கு எதிரான தமிழர் என்ற அமைப்போடு சேர்ந்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர உள்ளது.
மனித உரிமை, அடிப்படைச் சுதந்திரங்களுக்கான பாதுகாப்பு சாசனம் என்ற ஐரோப்பிய மனித உரிமை சாசனத்தை நார்வே 1952 -ம் ஆண்டும், சுவிசர்லாந்து 1974-ம் ஆண்டும் கையெழுத்திட்டு அங்கீகரித்திருக்கின்றன. இந்த சாசனத்தின் பிரிவு 34 அனுமதிக்கின்ற வழக்குத் தொடரும் உரிமைக்கு ஏற்ப இந்த வழக்குத் தொடரப்பட உள்ளது.
வழக்கிற்கான ஆதாரங்களில் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை வெளியான 182 வீடியோ பதிவுகளை வழக்காளர்கள் ஆராய்ந்துள்ளனர். அவற்றோடு இலங்கை இராணுவத் தளபதி ஜகத் டயஸின் வன்னி மீதான படை நகர்வுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து, தமது ஆதாரங்களை முன்வைக்கும் வழக்காளர்கள் 6 வீடியோ பிரதிகளையும், 2 படங்களையும், 4 வரைபடங்களையும் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications