நரேஷ் குப்தாவுக்கு அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
சென்னை: நரேஷ் குப்தாவுக்கு அடுத்து வரப் போகும் தலைமைத் தேர்தல் அதிகாரி யார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
இதுவரை நான்கு பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை தமிழக அரசு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதிலிருந்து ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படுவார்.
கண்டிப்புக்கும், நேர்மைக்கும் பெயர் போன நரேஷ் குப்தா தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் வசவுகளையும் பெருவாரியாக சம்பாதித்துக் கொண்டவர். காரணம், யாருக்கும் அடிபணியாமல் அவர் நடந்து கொண்டதால்.
அப்படிப்பட்ட நரேஷ் குப்தாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு தர தேர்தல் ஆணையம் விரும்பியது. அவரது திறமையும், பணி அனுபவமும், வருகிற தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தேர்தல் ஆணையம் கருதியது. ஆனால் பணி நீட்டிப்பை குப்தா விரும்பவில்லை.
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான அரசியல் அழுத்தங்களை இனியும் தாங்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணி நீட்டிப்பை அவர் வேண்டாம் என்று கூறி விட்டார்.
இதையடுத்து புதிய அதிகாரியை நியமிக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் மும்முரமாக உள்ளது.
இதையடுத்து தமிழக அரசிடம் 3 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை கேட்டிருந்தது தேர்தல் ஆணையம். முதலில் அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த மூன்று பேரையும் நிராகரித்த தேர்தல் ஆணையம் தற்போது மேலும் 3 பேர் கொண்ட பட்டியலை பெற்றுள்ளது.
இதுபோக தமிழக அரசின் நிதித்துறை செலவுப் பிரிவு செயலாளராக இருக்கும் பிரவீன் குமார் பெயரையும் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
இவரும் கண்டிப்புக்குப் பெயர் போனவர் என்று கூறப்படுகிறது. மேலும், அரசியல்சார்பற்றவரும் கூட என்றும் தெரிகிறது. எனவே இவர் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.