பாக்ஸ்கான் தொழிலாளர்கள் மயக்கத்திற்கு பூச்சி மருந்தே காரணம்-மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
முன்னதாக அங்கு விஷ வாயு கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் அங்கு சுகாதார வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தகுதிச் சான்றிதழ் பெறப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து நிறுவனத்தை மூட அரசும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பிரச்சினைக்கு பூச்சி மருந்தே காரணம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சிப்காட் உயர் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் இரண்டாம் பகுதியில் அமைந்துள்ள பாக்ஸ்கான் இந்தியா தொழில் நிறுவனத்திற்கு செல்போன் தயாரித்திட 30-3-2012 வரை உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த தொழிற்சாலையின் முதல் தளத்தில் செல்போன்கள் தயாரிக்கும் கூடத்தில் கடந்த 23-7-2010 அன்று மாலை 4 மணியளவில் 4 தொழிலாளர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
அந்த இடத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டு அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அருகில் அமைந்துள்ள நோக்கியா சிறப்பு பொருளாதார வளாகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் 24-7-2010 அன்று அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், அப்பகுதியில் வாயுவோ, ரசாயன பொருள்களோ பயன்படுத்தப்படுவதில்லை என்றும், அப்பகுதியில் தெளிக்கப்பட்ட பூச்சிமருந்து காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் தெரிய வருகிறது.
24-7-2010 அன்று நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு மாற்றப்பட்ட தொழிலாளர்களில் ஏறத்தாழ 10 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஜெயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களில் 4 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 6 பேர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அன்றே வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதை மருத்துவமனை அதிகாரிகளும் உறுதி செய்தனர். ராமச்சந்திரா மருத்துவமனையில் குறிப்பிட்ட அந்த பிரிவை சேர்ந்த ஏறத்தாழ 120 தொழிலாளர்களுக்கு 25-7-2010 அன்று முன் மருத்துவ சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 18 பேர் வெளிப்பிணியாளராக அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.