கக்கன், காமராஜருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஜெ.-ஆற்காடு வீராசாமி
சென்னை: கட்சியை முறையாக நடத்த முடியாத ஜெயலலிதா, காமராஜருக்கும், கக்கனுக்கும் மரியாதை கொடுக்க முன்வருவது ஏமாற்றுவேலை. நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை கடற்கரை சாலையில் இருந்த கற்புக்கரசி கண்ணகி சிலை, அகற்றியதைப் பற்றி கவலைப்படாத ஜெயலலிதா, இப்போது காமராஜருக்கும், கக்கனுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
சினிமாவில் தான் பலவேடங்களை போடமுடியும். அரசியலில் நாளுக்கு ஒரு வேடம் போட்டால், மக்கள் ரசிக்க மாட்டார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தனது தமிழ் இனப்பகையை வெளிப்படுத்திய ஜெயலலிதா, தற்போது இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
காமராஜருக்கு முதன் முதலில் சிலை வைத்தது திமுகதான். கன்னியாகுமரி கடற்கரையில் காமராஜருக்கு நினைவு மண்டபம் அமைத்து அழகு பார்த்தவர் முதல்வர் கருணாநிதி. தியாகி கக்கனுக்கு தும்பைப்பட்டியில் விழா நடத்தியது திமுக ஆட்சியில்தான்.
கட்சியை முறையாக நடத்த முடியாத ஜெயலலிதா, காமராஜருக்கும், கக்கனுக்கும் மரியாதை கொடுக்க முன்வருவது ஏமாற்றுவேலை என்று தெரிவித்துள்ளார்.