விரைவில் வெளியிடப்படுகிறது புதிய கல்விக் கட்டணம் : நீதிபதி கோவிந்தராஜன்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்விக் கட்டண விகிதம் விரைவில் அறிவிக்கப்படும் என நீதிபதி கோவிந்தராஜன் அறிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், தமிழக அரசு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கல்விக்கட்டணத்தை நிர்ணயித்தது. அந்த குழு தமிழகமெங்கும் பள்ளிகளை ஆய்வு செய்து, ஆய்வின் அடிப்படையில் குறிப்பிட்ட கல்விக்கட்டண விகிதத்தை நிர்ணயம் செய்தது.
அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி பல பள்ளிகள் மேல்முறையீடு செய்துள்ளன. இதையடுத்து நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளில் மீண்டும் ஆய்வு செய்து புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், நீதிபதி கோவிந்தராஜன், நேற்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.
அவர் புதிய கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க நடந்து கொண்டிருக்கும் பணிகள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
புதிய கல்விக்கட்டணம் நிர்ணயப் பணிகள் பற்றி முதலமைச்சர் கருணாநிதியிடம் கலந்தாலோசித்தோம். எந்தெந்த அடிப்படையில் கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை அவரிடம் விவரித்தோம். தமிழ்நாட்டில் 10,430 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 6 ஆயிரம் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்துமாறு மேல்முறையீடு செய்துள்ளன.
அனைத்து பள்ளிகளின் கட்டணத்தை திருத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. கட்டண நிர்ணய பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன். திருத்தப்பட்ட புதிய கல்விக்கட்டணத்தை விரைவில் வெளியிட உள்ளோம். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் புதிய கட்டண விவரம் அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொரு பள்ளியின் கல்விக்கட்டணம் எவ்வளவு என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பது எனது விருப்பம். இது குறித்து கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலேசித்து முடிவு எடுக்கப்படும்.
ஏற்கனவே, அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்கள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கிடைத்த 23 புகார்களில் 8 புகார்கள் உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு கிடையாது. எனவே, புகார்கள் நிரூபிக்கப்பட்ட பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
இந்த புதிய கல்விக்கட்டணம் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும். மேலும், இது இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்தப்படும். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைவிட அதிகம் வசூலிக்கப்பட்டிருந்தால் அந்த கட்டணம் மாணவர்களிடம் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும். குறைவாக வசூலிக்கப்பட்டிருந்தால் மீதி கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து பள்ளிகள் வசூலித்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.