வத்திராயிருப்பு கலவரம்-நேற்று வியாபாரி வெட்டிக்கொலை-இன்று வாலிபர் குண்டு வீசி கொலை
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பெரும் கலவரம் மூண்டது. நேற்று பால் வியாபாரியை வெட்டிக்கொலை செய்தனர். இன்று ஆட்டுக் கிடை போட்டிருந்த வாலிபர் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டார்.
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிராமத்தில் இருபிரிவினருக்கு இடையே பெரும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக மாறியது. இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் கருப்பையா என்ற பால் வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேருக்கு சரமாரி வெட்டு விழுந்தது.
வீடு, கடைகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. கலவரத்தை விரைந்து வந்த போலீஸார் நிலைமை கட்டுக்குள் இல்லாததையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.
அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் வெளியேறி விட்டனர்.
3 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர். மேல கோபாலபுரத்தில் அவர்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு போலீஸார் விரைந்தனர். ஆனால் கிராமத்தினர் நுழைய விடாமல் தடுத்தனர். கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்ட பின்னர் வீடு வீடாக சோதனை போடப்பட்டது. ஆனால் யாரும் சிக்கவில்லை.
இந்த நிலையில், இன்று காலை மீண்டும் மோதல் வெடித்தது. வ.புதுப்பட்டிக்கு அருகே உள்ள மாத்தூர் கிராமத்தில் ராமு என்ற இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டார்.
விருதுநர் மாவட்டம் மகராஜபுரம் அண்ணா நகரில் வசித்து வந்த ராமு தனது தந்தை மூக்கையா மற்றும் நண்பர் முத்துராஜ் ஆகியோருடன் சேர்ந்து மாத்தூரில் ஆட்டுக்கிடை போட்டு இருந்தார். ஆடுகளுக்கு பாதுகாப்பாக 3 பேரும் அங்கேயே இருந்தனர்.
இன்று அதிகாலை 30 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து அவர்களிடம் திடீரென தகராறில் ஈடுபட்டது. கும்பலில் இருந்தவர்கள் வெடி குண்டுகளை வீசினர். அரிவாளாலும் வெட்டினர். இதில் ஒரு குண்டு வெடித்ததில் ராமு, மூக்கையா, முத்துராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராமுவை மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்து விட்டார். மூக்கையாவும், முத்துராஜூம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்து 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications