ஆலடி அருணா கொலை வழக்கு-எஸ்.ஏ.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது ஆலடி அருணாவும், அவரது நண்பரான ஆசிரியர் பொன்ராஜ் என்பவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து நெல்லை, குமரி மாவட்டங்களில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவரான எஸ்.ஏ.ராஜா, வேல்துரை உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இவர்கள் மீதான வழக்கு தென்காசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் இறுதியில்,2006ம் ஆண்டு ராஜா உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அழகர், பாலமுருகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ஆயுதம் வைத்திருந்ததாக வேல்துரைக்கு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. (ஒருவர் விசாரணை நடந்து வந்த நிலையில் உயிரிழந்து விட்டார்)
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் மாலா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ்.ஏ.ராஜா உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தார். அந்த அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜாவுக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை என்று கூறி ராஜாவை விடுதலை செய்து இன்று உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின்போது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி கொழும்பு செல்ல முயன்றபோது கைது செய்ய போலீஸாரால் பிடிக்கப்பட்டார் ராஜா. அதேபோல இடையில் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றும் வந்தார். 2 நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலிப்பதாக அவர் கூறவே அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டது முதல் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications