ஜெ. கூட்டத்த்துக்குப் பதிலடியாக கோவையில் திமுகவும் ஆக. 2ல் கூட்டம்
கோவையில் ரூ. 380 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதை ஆகஸ்ட் 2ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். இதற்காக அவர் கோவை வருகிறார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இரவில் வ.உ.சி. திடலில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசவுள்ளனர்.
இந்த பொதுக் கூட்டம் குறித்த ஏற்பாடுகள் தொடர்பாக திமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதல்வர் கருணாநிதி கோவை விமான நிலையத்துக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு வருகிறார். காலையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார். அன்று மாலை திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட, முன்னணி திமுக தலைவர்கள் பலர் கோவை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரள்வார்கள் என்றார்.
கோவையில் அதிமுக நடத்திய பொதுக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே இடத்தில் திமுக பொதுக் கூட்டம் நடைபெறவிருப்பதால் சூடு அதிகமாகியுள்ளது.