'புர்ஹா': கட்டாயப்படு்த்தும் மாணவர்கள்-ஆசிரியை விலகல்!
கொல்கத்தா ஆலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம், தங்களது ஆசிரியைகள் கட்டாயம் புர்ஹா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் 7 ஆசிரியைகள் அதை அணிய ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், ஷீரின் மத்யா என்ற 24 வயது இலக்கிய ஆசிரியை புர்ஹா அணிய மறுத்துவிட்டார். மேலும் தனது பதவியை விட்டு விலகிவிட்ட அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் இன்னொரு கேம்சில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
இது குறித்து ஷீரின் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் மாணவர்கள் சங்கத்தினர் 8 ஆசிரியைகளை அழைத்து புர்ஹா அணிந்து தான் பல்கலைக்கழகத்துக்குள் வர வேண்டும் என்று உத்தரவு போட்டனர். இது குறித்து ஆலோசனைகள் எல்லாம் தேவையில்லை என்றும் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வேலையை விட்டுவிட வேண்டும் என்றும் கூறினர்.
யாராவது புர்ஹா அணிய விரும்பினால் அது சரி தான். ஆனால் அதை எப்படி அடுத்தவர் மீது கட்டாயப்படுத்த முடியும்?. நான் விரும்பினால் அதை நிச்சயம் அணிவேன். இவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதற்காக அதை என்னால் அணிய முடியாது என்றார்.
இது குறித்து மாணவர்கள் சங்க பொதுச் செயலாளர் முகம்மத் அதிகுர் ரஹ்மான் கூறுகையில், இந்தப் பல்கலைக்கழகம் மதரஸாவில் அமைந்துள்ளது. இந்த வளாகமே மதரஸா தான். இங்கு பெண்கள் புர்ஹா அணிவது அவசியம் என்றனர்.
இது குறித்து மேற்கு வங்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துஸ் சத்தார் கூறுகையி்ல், இது மிகவும் சீரியசான விஷயம். ஒரு தனி மனித உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆசிரியைகளை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.