For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு-மேட்டூருக்கு நாளை வந்து சேரும்

Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து கர்நாடக அரசு 20 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டுள்ளது. இந்தத் தண்ணீர் நாளை மேட்டூர் அணையை வந்தடையும்.

தென் மேற்குப் பருவ மழை காரணமாக கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக காவிரியின் குறுக்கே உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.

இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கபினியிலிருந்து விநாடிக்கு 16,000 கன அடி நீரும், கிருஷ்ணராஜசாகரிலிருந்து கிட்டத்தட்ட 4 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் நாளை மேட்டூர் அணையை வந்தடையும்.

இந்த நீரின் வருகையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து, காவிரிப் பாசனப் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு சமீபத்தில்தான் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

காவிரி நதி நீர் ஆணைய இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 205 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் அதை கர்நாடகம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணையில் தற்போது 82.27 அடி நீர் இருப்பு உள்ளது. மொத்தக் கொள்ளளவு 120 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 4,608 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு:

இந் நிலையில் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்புத் தெரிவித்து மண்டியா மாவட்டம் இன்டவாலு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கோஷம் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் டயர்களை தீவைத்து எரித்தனர்.

இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

அதே போல போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கூறுகையி்ல், அணை இன்னும் நிரம்பவே இல்லை. எனவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. பருவமழை எந்த அளவுக்கு பெய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்த்து அதன் பிறகு தான் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X