தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது-குரேஷி
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லா ஓய்வு பெற்றதையடுத்து புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட எஸ்.ஒய்.குரேஷி இன்று காலை டெல்லியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 17வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள அவர் 1971ம் ஆண்டு ஹரியானா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியானவார். நாட்டின் முதல் முஸ்லீம் தலைமைத் தேர்தல் ஆணையரும் இவர் தான்.
பதவியேற்ற பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவை எந்த மாதிரியான நடவடிக்கைகள் என்பது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் முன்கூட்டியே தேர்தல் வராது. அதற்கான எந்த ஏற்பாடுகளும் நடக்கவில்லை. தேர்தல் நடைபெற வேண்டிய காலத்துக்கு 6 மாதத்துக்கு முன்பு தான் நாங்கள் தேர்தல் குறித்து நடவடிக்கைகள் தொடங்குவோம்.
இந்தியாவில் ஓட்டு எந்திரங்கள் 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை. அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை நீக்கப்படும் என்றார்.