சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்!
தெலுங்கானாவில் உள்ள 12 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 11 இடங்களில் தெலுங்கானாராஷ்டிரிய சமிதியும், ஒரு இடத்தில், அக்கட்சியின் ஆதரவு பெற்ற பாஜகவேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மகா மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. பல தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் இழந்துள்ளது. அதே கதிதான் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கும் நேர்ந்துள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவரான ஸ்ரீனிவாஸ் படுதோல்வியடைந்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து நடிகை விஜயசாந்தி கருத்து தெரிவிக்கையில்,
ஒன்றுபட்ட ஆந்திரா நீடிக்க வேண்டும் என்று கேட்டவர்களுக்கு இத்தேர்தல் முடிவு, சம்மட்டி அடியாக அமைந்துள்ளது. இந்த முடிவை வாழ் நாளில் யாரும் மறக்க மாட்டார்கள். இத்தகைய வெற்றி எல்லோருக்கும் கிடைத்திருக்க முடியாது. தெலுங்கானாவுக்காக ராஜினாமா செய்த எல்லோரையும் மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர்.
ஆந்திராவும், தெலுங்கானாவும் தனது இரு கண்கள் என்று சந்திரபாபு நாயுடு கூறி இருந்தார். அவருக்கு ஒரு கண் போய்விட்டது. மீதியுள்ள கண்ணையாவது அவர் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரஜா ராஜ்யத்துக்கு ஏற்கனவே சாவுமணி அடித்தாகி விட்டது. தெலுங்கானா அமைக்காவிட்டால், காங்கிரசும் மூட்டையை கட்ட வேண்டியது தான். தெலுங்கானா மாநிலம் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது என்றார் ஆவேசமாக.