சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன்
மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகன்தான் ராகுல் மகாஜன். அரசியலில் இளம் புயலாக திகழ்ந்தவர் பிரமோத். அனைத்துத் தரப்பினரிடமும் மரியாதையை நிறைய சம்பாதித்து வைத்திருந்தவர். ஆனால் அவருக்கு அப்படியே நேர் மாறாகஇருக்கிறார் ராகுல். இவர் சேர்த்து வைத்து வருவது எல்லாம் அவப் பெயர் மட்டுமே.
பிரமோத் மறைவுக்குப் பின்னர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். பின்னர் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு என்டிடிவி இமேஜின் டிவி மூலம் ஒரு சுயம்வரத்தை நடத்தினார். ராகுல் துனியா லே ஜாயகா என்ற அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் மணக்கப் போகும் பெண்ணை தேர்வு செய்யவுள்ளதாக அறிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கொல்கத்தா அழகியான டிம்பி கங்குலியைத் தேர்வு செய்தார். அவரையே மணந்தார். சரி, இத்தோடு ராகுல் மகாஜனைப் பிடித்த கெட்ட காலம் முடிந்தது.இனியாவது அவர் சந்தோஷமாக இருக்கட்டும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் நாலே மாதத்தில் அவரை விட்டுப் பிரிந்து வந்து விட்டார் டிம்பி.
ராகுல் மீது சரமாரியாக புகார்களையும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு டிவி பேட்டியில், வியாழக்கிழமை காலை எனக்கு வந்த ஒரு எஸ்எம்எஸ் செய்தியைப் பார்த்த அவர் அதுகுறித்து விளக்கம் கேட்டுகோபமாக பேசினார். நான் அதில் ஒன்றும் விசேஷமாக இல்லை, தூங்குங்கள் என்று கூறினேன். உடனே என்னை சரமாரியாக அடித்து உதைத்தார் ராகுல் மகாஜன்.
என்னை உதைத்தார். தலைமுடியைப் பிடித்து இழுத்தார், அடித்தார் என்றார் டிம்பி.
ராகுல் மனைவியை அடிப்பது இது முதல் முறையல்ல. அவரது முதல் மனைவியான ஸ்வேதா சிங்கும் கூட தன்னை ராகுல் அடித்து உதைப்பார் என்று முன்பு கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். 2008ம் ஆண்டுதான் ராகுலும், ஷ்வேதா சிங்கும் பிரிந்தனர்.
மனைவியைப் பிரிந்திருந்த நிலையில் கலர்ஸ்டிவி நடத்தி பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியி்ல கலந்து கொண்டார் ராகுல். அங்கும் அவர் சர்ச்சையில் சிக்கினார்.
அவருடன் பங்கேற்ற நடிகை மோனிகா பேடி மற்றும் பாயல் ரஹோத்தி ஆகியோரிடம் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. ராகுல் தன்னை தொந்தரவு செய்து, சித்திரவதை செய்ததாக ரஹோத்தியும் புகார் கூறினார்.
தற்போது கட்டிய நாலே மாதத்தில் டிம்பியை அடித்து உதைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளதால் ராகுல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.