Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிற மாநில மின் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை உணர்வீர்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: பிற மாநிலங்களில் உள்ள மின் கட்டணங்களுடன் தமிழக கட்டணத்தை ஒப்பிட்டுப் பார்த்து உண்மை நிலையை உணருமாறு எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

மின் கட்டண உயர்வை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி அளித்துள்ள நீண்ட விளக்கம்:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மின் பகிர்மானத்தில் ஏற்படும் மின் இழப்பை குறைத்தல், நிர்வாகத் திறனை மேம்படுத்துதல், புதிய மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி சுய மின் உற்பத்தியைப் பெருக்குதல், அதன் விளைவாக வெளி மாநிலங்களில் இருந்தும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வைத் தவிர்த்திருக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

இதே கருத்தைத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற வேறு சில கட்சியினரும் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருக்கின்ற இந்த அனைத்து முயற்சிகளையும் கழக அரசு மேற்கொண்ட காரணத்தினால் தான் நான்காண்டு காலமாக மின்வெட்டினால் ஏற்படக் கூடிய தொல்லைகளையும் சமாளித்து, மின் கட்டண உயர்வினை தமிழக அரசு தவிர்த்து வந்தது.

மின் உற்பத்தி என்பது முதல் நாள் இரவு அறிவித்து மறுநாள் காலையில் உற்பத்தியைத் தொடங்கி விட முடியாது. மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளதையும், தொடர்ந்து ஈடுபட்டு வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

ஒருசிலர், அனைத்துத் தரப்பினரையும் இந்த மின் கட்டண உயர்வு பாதிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அது தவறான தகவல் ஆகும். இரண்டு மாதத்துக்கு 600 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொது வழிபாட்டுத் தலங்கள், வேளாண் மின் நுகர்வோர் ஆகியோருக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் இல்லை என்று தெளிவாக அனைத்து ஏடுகளிலும் இன்று செய்தி வந்துள்ளது. அதற்குப் பிறகும் அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் வீடுகளுக்கு மின்சாரம் உபயோகிப்போர் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பைப் பார்த்தால், மொத்தம் 149.86 லட்சம் பேரில்- இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 118.05 லட்சம் பேர்களாகும். இவர்களுக்கு எந்தவிதமான மின் உயர்வும் தற்போது செய்யப்படவில்லை.

இரண்டு மாதங்களுக்கு 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 52 ஆயிரம் பேர்களாகும். இவர்களுக்கும் மின் கட்டணத்தில் எந்தவிதமான உயர்வும் தற்போது செய்யப்படவில்லை.

இரண்டு மாதங்களுக்கு 401 யூனிட் முதல் 600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 10 ஆயிரம் பேர்களாகும். இவர்களுக்கும் தற்போது எந்தவிதமான மின் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.

இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களாகும். இவர்களுக்கு மட்டும் தற்போது; கட்டண உயர்வில் யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்தம் 137 லட்சத்து 88 ஆயிரம் பேர்களில், 3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அதாவது மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவிற்கு மின் கட்டணம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த 3 லட்சம் பேருக்கும் கூட மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த மூன்று லட்சம் பேரும் யார் என்றால், இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டிற்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துவோராகும். அவர்கள் எல்லாம் தங்கள் வீடுகளுக்கு ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் இயந்திரம், மிக்ஸி போன்ற நவீன வசதிகளை அதிகமாகப் பயன்படுத்துவோராகும்.

தினமணி நாளிதழில் கூட குடிசைகளுக்கு பழைய கட்டணம் மாதம் பத்து ரூபாய் என்றும், புதிய கட்டணம் பத்து ரூபாய் என்றும் கட்டம் கட்டி வந்துள்ளது. இது கூட சரியல்ல. இந்தப் பத்து ரூபாய் கட்டணத்தையும் மானியமாக தமிழக அரசே மின்வாரியத்திற்குத் தந்து விடுகிறது.

அதனால் அனைத்துக் குடிசைவாசிகளுக்கும் மின் கட்டணமே கிடையாது என்பது தான் உண்மை. இத்தகைய குடிசைவாசிகள் தமிழகத்தில் 11 லட்சத்து 98 ஆயிரம் பேர்களாகும்.

மின் பகிர்மானத்தில் ஏற்பட்டு வரும் மின்சார இழப்பு 2008-2009இல் 18.3 விழுக்காடு என்றும், அது தற்போது 18.9 விழுக்காடாக உயர்ந்து விட்டது என்றும், அது அதிர்ச்சி தரத்தக்கதாக உள்ளது என்றும் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.

இந்திய அளவில் மின்சார இழப்பு எவ்வளவு என்று பார்த்தால், 38 விழுக்காடு மின் பகிர்மானத்தில் இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவிலே உள்ள அனைத்து மாநிலங்களையும் எடுத்துக் கொண்டால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த அளவிற்கு டெல்லிக்கு அடுத்தபடியாக மின்சார இழப்பு என்று புள்ளி விவரம் கூறுகிறது. தற்போதுள்ள மின் இழப்பைக் கூட சரிக்கட்டுவதற்காக தமிழக அரசு புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

மின் உற்பத்தி பெருகி வாரியத்தின் வருவாய் பற்றாக்குறை குறைந்தால் இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் மின் கட்டணம் குறைக்கப்படுமா என்பது குறித்து மின்வாரியம் தெளிவுபடுத்த வேண்டுமென்று ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பிலேயே சிறிய கடைகளை வைத்துள்ள வணிகர்களுக்கு இதுவரை கட்டணமாக யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 5.30 என்பது இன்று முதல் ரூ. 4.30 என்று குறைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அரசைப் பொறுத்தவரை கட்டணத்தை உயர்த்தினால் உயர்த்தியது தான் என்ற அளவில் இல்லாமல், நிலைமை முன்னேறினால் கட்டணத்தையும் குறைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தான் இப்போது குறைத்துள்ள செயலாகும்.

கடந்த நான்காண்டு காலமாக கழக அரசைப் பொறுத்தவரையில் மின் கட்டணமோ, பேருந்து கட்டணமோ உயர்த்தப்பட வில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

மின்வாரியத்திற்கு மேலும் மேலும் இழப்பு ஏற்பட்ட நிலையிலே எல்லாம் கூட தமிழக அரசு அதற்கான மானியங்களை வழங்கி வருகிறது என்பதையும், தற்போது நிலைமையை ஓரளவுக்கு சரிக்கட்டும் வகையிலே தாங்கக் கூடியவர் களுக்கு மட்டும் இந்தக் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.

இதிலே கூட ஒழுங்குமுறை ஆணையம் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வு செய்யப்பட வேண்டுமென்று வலியுறுத்திய நிலையிலே கூட நானே அவர்களை வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு எந்த கட்டண உயர்வும் செய்யப்பட வேண்டியதில்லை என்று கேட்டுக் கொண்டு அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தேன்.

இந்த மின் கட்டணங்களை மற்ற மாநிலக் கட்டணங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கூட - வீட்டு உபயோகத்திற்காக மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு தமிழ்நாட்டில் யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.85 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால் யூனிட் ஒன்றுக்கு கேரளாவில் ரூ.3.39 - மராட்டியத்தில் ரூ.4.83 - மேற்கு வங்கத்தில் ரூ.3.57 - உத்தரப் பிரதேசத்தில் ரூ.3.15 - கர்நாடகாவில் ரூ.4.02 - ஆந்திராவில் ரூ. 3.51-குஜராத் மாநிலத்தில் ரூ.3.64 - டெல்லியில் ரூ. 3.68 என்ற அளவிற்கு தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகின்றது

என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழகத்தில் எந்த அளவிற்கு குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதைப் பாமர மக்களும் புரிந்து கொள்ளலாம் என்று விளக்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+