'உயர்ஜாதிக்காரர்களை கொன்றதற்குப் பழிவாங்கவே பூலான் தேவி கொல்லப்பட்டார்'

உ.பி.மாநிலத்தைச் சேர்ந்த பயங்கர கொள்ளைக்காரி பூலான் தேவி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பூலான் தேவி, உ.பி. மாநில உயர்ஜாதிக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். மல்லா வகுப்பைச் சேர்ந்த பூலான் தேவிக்கு, உயர் ஜாதிக்காரர்களான தாகூர் இனத்தவர்கள் மீது மிகக் கடும் கோபம் இருந்தது.
சிறு வயது முதல் உயர் ஜாதிக்காரர்களால் வேட்டையாடப்பட்டதால் பூலான் தேவிக்கு அந்த வெறி வந்தது.
கொள்ளைக்காரியாக அவர் இருந்தபோது, 1981ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி உ.பி.மாநிலம் பெஹமாய் கிராமத்திற்கு அவரும், அவரது கும்பலும் சென்றனர். அங்கிருந்த தாக்கூர் இனத்து ஆண்களை வரிசையாக நிற்க வைத்து சரமாரியாக சுட்டனர். இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது. பயங்கர கொள்ளைக்காரியாக அப்போதுதான் பூலான் தேவியை நாடு உணர்ந்தது.
இந்த சம்பவத்தால், அப்போது உ.பி. முதல்வராக இருந்த வி.பி.சிங், இச்சம்பவத்தைத் தொடர்ந்து பதவி விலகினார். பெஹமாய் கிராமத்தில் வைத்துதான் பூலான்தேவியை தாக்கூர் இனத்தைச் சேர்ந்த பயங்கர கொள்ளைக்காரனான ஸ்ரீராம் தாக்கூர் என்பவன் (இவனது கும்பலில்தான் பூலான் தேவி முன்பு இருந்தார்) கொடூரமாக பலமுறை கற்பழித்தான். அவன் மட்டுமல்லாமல் அவனது கும்பலில் இருந்தவர்களும் பூலான் தேவியை பல நாட்கள் வைத்துக் கற்பழித்தனர். இதற்குப் பழிவாங்கவே 22 பேரை சுட்டுக் கொலை செய்தார் பூலான் தேவி.
பின்னர் பூலான் தேவி போலீஸில் சரணடைந்தார். சிறைத் தண்டனையை அனுபவித்தார். அரசியலிலும் புகுந்தார். சமாஜ்வாடிக் கட்சி சார்பில் எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில்தான் 2001ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி டெல்லியில் வைத்து பூலான்தேவி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த கொலைதொடர்பாக ஷெர் சிங் ரானா, தீரஜ் ரானா, ராஜ்பீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கடந்த 9 வருடங்களாக நடந்து வருகிறது.
இந்த வழக்கில் 170வது சாட்சியாக உள்ள விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சுரேஷ் கெளசிக் டெல்லி கோர்ட்டில் சாட்சியம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், பெஹமாய் சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையிலேயே பூலான் தேவியை தான் சுட்டுக் கொன்றதாக ஷெர் சிங் ரானா, வாக்குமூலம் அளித்துள்ளான்.
பூலான் தேவியைக் கொல்வதன் மூலம் தனது சமூகத்தில் தனக்கு ஹீரோ அந்தஸ்து கிடைக்கும், தாக்கூர் இனத்தவர்களின் தலைவனாகி விடலாம் என்பது அவனது திட்டம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications