செல்போனில் பேசிக் கொண்டே பஸ் ஓட்டிய டிரைவரால் 3 பேர் பலி
சென்னை: மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் செல்போனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டியதில் தாய், பச்சிளங் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நேற்று மாலை பழைய மாமல்லபுரம் சாலையில் நடந்தது.
இந்த சம்பவத்தில் டி. சங்கீதா (30), அவரது 18 மாத மகன் டி. கௌதம் மற்றும் அவரின் தாயார் வி. பூங்காவனம் (60) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும், ஒய். சதீஷ் குமார் (25) என்பவர் காயமடைந்தார். அவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்தவரக்ள் காயமின்றி உயிர் தப்பினர். இறந்தவர்களின் உடல்கள் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பேருந்து
ஓட்டுநரையும், நடத்துநரையும் தேடி வருகின்றனர்.
மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து மோதி 3 பேர் அநியாயமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் கூடி விட்டனர். சாலை மறியலில் குதித்தனர். பஸ்சையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இதையடுத்து மாமல்லபுரம் டி. எஸ். பி. மாணிக்கம் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்கள் போராட்டம் காரணமாக பழைய மாமல்லபுரம் சாலையில் 2 கி. மீ. தூரத்திற்கு வண்டிகள் போக வழியின்றி நின்றன. இதுகுறித்து டிஎஸ்பி மாணிக்கம் கூறுகையில், விபத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவர் என்று தெரிவித்தார்.
சங்கீதா, தன் மகன் மற்றும் தாயாருடன் சாலையோரக் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது தான் திருப்போரூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து அவர்கள் மீது மோதியது என்று கேளம்பாக்கம் போலீசார் தெரிவித்தனர்.
கண் மூடித் திறப்பதற்குள் இது நடந்துவிட்டது. ஒரு அரசு பேருந்து ஓட்டுநர் இவ்வளவு கவனக்குறைவாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் என்று சம்பவத்தை பார்த்த ஜி. முருகன் என்பவர் கூறினார்.












Click it and Unblock the Notifications