தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னணி-ஸ்டாலின்

கோவை டைடல் பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொண்டு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில், முதன் முதலாக தரமணியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். சென்னைக்கு அருகில் உள்ள இந்த தரமணி தகவல் தொழில் நுட்ப பூங்கா தொடர்ந்து 10 ஆண்டு காலமாக நல்ல லாபத்தை ஈட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை போன்ற மாநகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தொடங்குவதற்கு முதல்வர் கலைஞர் முடிவு செய்தார்.
இங்கு அமைந்து உள்ள டைடல் பூங்காவை பொறுத்தவரை டிட்கோ, எல்காட், டைடல் பூங்கா, எஸ்.டி.பி.ஐ ஆகியவை ஒன்று சேர்ந்து 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா மூலம் ஏறக்குறைய 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் 2 ஆயிரம் தொழில்நுட்ப, சார்பு பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
ஆகவே தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பொறுத்த வரை இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற மாநிலங்களை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கிற போது தமிழ்நாடு முன்னிலை பெற்ற மாநிலமாக விளங்கி வருகிறது. 2001-02-ம் ஆண்டில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை மூலமாக நமக்கு கிடைத்திருக்கிற வருவாய் 10.2 மில்லியன் டாலர் ஆகும். தொடர்ந்து 2008-09-ம் ஆண்டில் 58.7 மில்லியன் டாலராக மாறியது. 2010-ம் ஆண்டில் இதன் வருவாய் 73.1 மில்லியன் டாலராக உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆகவே தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை பொறுத்தவரை 2009-10-ம் ஆண்டில் 8 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 4 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் வர்த்தகத்தை செய்து இன்றைக்கு நாம் ஒரு உன்னதமான இடத்தை பெற்றுள்ளோம்.
இன்னும் 2 ஆண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழ்நாட்டின் பங்கு 25 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது. அதற்கான முயற்சியில் கலைஞர் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications