நூதன முறையில் 35 பவுன் நகை திருட்டு: ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் 10 ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதாகக் கூறி பக்தரிடம் ரூ.3 லட்சம் மதிப்பிலான 35 பவுன் நகைகளை நூதன முறையில் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
எட்டயபுரம் அருகே உள்ள செமபுதூர் டி.சண்முகபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சீதாலெட்சுமி. கடந்த 1-ம் தேதி பெருமாள் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். அங்குள்ள தனியார் மண்டபத்தில் பைகளை வைத்துவிட்டு கடலில் குளிக்க சென்றனர்.
சீதாலெட்சுமி தனது தங்க செயின்கள், மோதிரம், பெரியம்மாவுக்கு சொந்தமான நகைகள் என 35 பவுன் தங்க நகைகளை பையில் வைத்து தந்தை சென்னப்பனிடம் கொடுத்துவிட்டு குளிக்க சென்றார்.
அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் இரண்டு 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு விட்டு சென்னப்பனிடம் அவருக்கு சொந்தமான பணம் கீழே கிடப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய அவர் தங்க நகைகள் உள்ள பையை கீழே வைத்து விட்டு பணத்தை எடுக்க சென்றார். அப்போது அந்த மர்ம நபர் நகைகள் இருந்த பையை எடுத்து கொண்டு ஓடிவி்ட்டார்.
பறிபோன நகைகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்.












Click it and Unblock the Notifications