தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
சென்னை : தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீ்ழ் தன்னை கைது செய்ததை எதிர்த்து நாம் தமிழர் தலைவர் சீமான் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கிக் கொல்வதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், சிங்களர்களுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவக்குமார், நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 6 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.