காமன்வெல்த் ஊழல் எதிரொலி-ஒருங்கிணைப்புக் குழு பொருளாளர் ராஜினாமா
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக வெளியாகி வரும் பரபரப்பின் பின்னணியில் ஒருங்கிணைப்புக் குழுவின் பொருளாளர் அனில் கண்ணா அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிக் குழு மீதான நிதி மோசடிப் புகார்கள் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. இதுதொடர்பாக எந்தவிதமான விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்கத் தயார் என போட்டிக் குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி கூறியுள்ளார்.
இந்த நிலையில், போட்டிக் குழுவின் பொருளாளர் பொறுப்பிலிருந்து அனில் கண்ணா விலகியுள்ளார். அவரது மகனின் நிறுவனத்திற்கு டென்னிஸ் ஸ்டேடியத்தில் செயற்கைப் புல் தரை (synthetic) கோர்ட்களை அமைக்கும் கான்டிராக்ட் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த பதவி விலகல்.
இந்திய டென்னிஸ் சம்மேளன செயலாளராக இருப்பவர் அனில் என்பது குறிப்பிடத்தக்கது. புகார்களைத் தொடர்ந்து தார்மீக அடிப்படையில் தனது பதவியை கண்ணா ராஜினாமா செய்துள்ளதாக போட்டிக் குழு தெரிவித்துள்ளது.
கண்ணாவின் மகன் ஆதித்யா பணியாற்றி வரும் ரிபவுன்ட் ஏஸ் என்ற நிறுவனத்திடம், ஆர்.கே.கண்ணா டென்னிஸ் ஸ்டேடியத்தில் 14 செயற்கைப் புல்தரை கோர்ட்களை அமைக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைமை செயலதிகாரியாக இருக்கிறார் ஆதித்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் அமைத்த செயற்கைப் புல்தரை, மிகவும் மோசமாக இருப்பதாகவும், கீழே விழுந்தால் பலத்த அடிபடும் என்றும் டென்னிஸ் வீரர்களும், வீராங்கனைகளும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
உண்மையில் இந்த நிறுவனத்தின் செயற்கைப் புல்தரையை ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நிர்வாகிகள் ஏற்கனவே நிராகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட மோசமான புல்தரையை இங்கு கொண்டு வந்து போட்டுள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பி விட்டது.
தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக குவிந்து வரும் புகார்களால் போட்டியின் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் வேகமாக தளர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications