நிலத்தகராறில் இரட்டை கொலை: தந்தை, மகனை பிடிக்க தனிப்படை
கயத்தார்: நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மைத்துனரையும், அவரது 2-வது மனைவியையும் வெட்டிக் கொன்ற தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே பரம்புகோட்டையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பூவய்யா. மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் தனியாக வசித்து வந்தார். வீட்டருகே லூர்து என்பவருடன் வேலைக்கு சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
கணவனை இழந்த லூர்து பூவய்யாவுடன் சேர்ந்து வாழ்ந்தார். லூர்து அக்கா ஜோதி குடும்பத்துக்கும், பூவய்யாவுக்கும் நிலத் தகராறு இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஜோதியின் மகன் விஜியும், பூவய்யாவும் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இருவரும் சமரசமாக சென்று விடலாம் என ஜோதியின் கணவர் சிதம்பரம் கூறியுள்ளார். இதை ஏற்காத பூவய்யா தன்னுடைய உறவினர்களிடம் விஜி மற்றும் சிதம்பரத்தை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் பூவய்யாவை கொல்ல திட்டமிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வீட்டு முன்பு பூவய்யாவும், லூர்தும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிதம்பரம், ஜோதி, விஜி மூவரும் அவர்களிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் மூவரும் அரிவாளால் பூவய்யாவை வெட்டினர். இதை தடுத்த லூர்துவுக்கும் வெட்டு விழுந்தது.
இருவரும் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 3 தனிப்படை அமைத்து சிதம்பரம், ஜோதி, விஜியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications