அமித் ஷாவை காவலில் எடுக்க குஜராத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அப்பீல்
அகமதாபாத்: சோராபுதீன் போலி என்கெளண்டர் விவகாரத்தில் குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரிடம் ஏற்கனவே இரு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் இவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. காவலில் எடுத்து விசாரிப்பதற்குத் தேவையான ஆதாரத்தை சிபிஐ தரவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஒய். தவே கூறிவிட்டார்.
மேலும் அமி்த் ஷா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்துக்கு போதுமான ஆதாரத்தை சிபிஐ அளிக்காததால் அவரது சிறைக் காவலை மேலும் நீட்டிக்கவும் அனுமதிக்க முடியாது என்றும் சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.
இது சிபிஐக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து அமித் ஷாவை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு குஜராத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சிபிஐ முன் ஆஜர்:
இந் நிலையில் போலி என்கெளண்டர் வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சிபிஐ முன்பு நேரில் ஆஜரானார்.
இந்த என்கெளண்டர் வழக்கை விசாரித்த குஜராத் போலீஸ் குழுவின் தலைவராக இருந்தவர் ஓ.பி. மாத்தூர். அப்போது இவர் குஜராத் மாநில சிஐடி பிரிவின் தலைவராக இருந்தார். அப்போது இவர் விசாரணையை காலதாமதம் செய்ததாகவும், சாட்சியங்களை கலைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந் நிலையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மாத்தூர், தற்போது குஜராத் மாநிலத்தின் ரக்ஷா பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளராக முதல்வர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்டார். இப்போதும் இவர் இதே பதவியில் நீடிக்கிறார்.
கடந்த மாதம் 27ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சிபிஐ ஏற்கெனவே இவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் சொந்த அலுவல் காரணமாக இவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று கூறிவிட்டு நேற்று ஆஜரானார்.
இவரது குழுவின் விசாரணையில் அதிருப்தி அடைந்து தான் இந்த சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இம்மாதம் 10ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மற்றொரு விசாரணை அதிகாரியான கீதா ஜோஹ்ரிக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஐபிஎஸ் அதிகாரி அபய்யை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும் கொலைகளைச் செய்த ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜி வன்ஸரா ராஜ்குமார், பாண்டியன் மற்றும் தினேஷ் உள்ளிட்டோரை கைது செய்த மூத்த அதிகாரியான ரஜ்னீஷ் ராயிமும் சிபிஐ வாக்குமூலம பெற்றுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 14 போலீஸாரை சிபிஐ கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications