எங்களுக்கு இந்த 'தெம்பு' சாதனை திட்டங்களால் வந்தது-ஸ்டாலின்
நெல்லை: ஒரு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு மக்களை சந்திப்பது சிரமம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்து, 5ம் ஆண்டு தொடங்கியுள்ளது. ஆனாலும் நாங்கள் எப்போதும்போல் தைரியமாக மக்களை சந்தித்து வருகிறோம். இதற்கு திமுக அரசின் சாதனை திட்டங்கள்தான் காரணம். இதனால் தான் மக்களை சந்திக்கும் தெம்பும், திராணியும் எங்களுக்கு இருக்கிறது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நெல்லை வண்ணார்பேட்டையில் ரூ. 16 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தப் பாலத்தை 24 மாதத்தில் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் மேம்பாலப் பணிகள் 17 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுபோலவே மக்கள் நலப் பணிகள்அனைத்தும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே முடிக்கப்படும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
தினம் தினம் திறப்பு விழாக்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதுவே திமுக ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
முதல்வர் கருணாநிதி அறிவுரைப்படி வண்ணார்பேட்டை மேம்பாலத்துக்கு முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய ஸ்டாலின்,
தமிழகத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 584 சுய உதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. பல விழாக்களில் பங்கேற்று மேடையில் நின்று அனைத்து குழுவினருக்கும், நானே சுழல் நிதி வழங்கி இருக்கிறேன். அதற்காக நான் 89 மணி நேரம் செலவழித்துள்ளேன். அது பற்றி பலர் என்னிடம், எப்படி இவ்வளவு பொறுமையாக மேடையில் நின்று வழங்குகிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு நான் அளித்த பதில் என்னவென்றால், சுழல் நிதி வாங்கும் தாய்மார்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, அவர்கள் தலைவர் கருணாநிதியைப் பற்றி விசாரிக்கும் விதம் ஆகியவை என் சோர்வை போக்கி சுறுசுறுப்பாக்கின. அதனால்தான் அத்தனை பேருக்கும் பல மணி நேரமானாலும் நின்று நிதியை வழங்க முடிந்தது என்றேன்.
பொதுவாக ஒரு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு மக்களை சந்திப்பது சிரமம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்து, 5ம் ஆண்டு தொடங்கியுள்ளது. ஆனாலும் நாங்கள் எப்போதும்போல் தைரியமாக மக்களை சந்தித்து வருகிறோம்.
இதற்கு திமுக அரசின் சாதனை திட்டங்கள்தான் காரணம். இதனால் தான் மக்களை சந்திக்கும் தெம்பும், திராணியும் எங்களுக்கு இருக்கிறது.
முதல்வர் கருணாநிதி கடந்த 1989ம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி வைத்தார். தற்போது சுய உதவிக் குழுவினர் கம்பீரமாக வளர்ந்து, மாபெரும் இயக்கமாக மாறியுள்ளனர்.
இந்த ஆட்சிக்கு நீங்கள் உறுதுணையாக நின்று உங்கள் ஆதரவை தொடர்ந்து தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications