'உள்நாட்டு நிறுவனங்களுக்கு மின் வெட்டு, அயல் நாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரமா?'
மதுரை: தமிழ்நாடு மின்சார வாரியம் உள்நாட்டு வணிகர்களுக்கும், சுய தொழில் புரிவோருக்கும் மின்வெட்டை அமல்படுத்துகிறது. ஆனால், பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கி வருகின்றது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் மீது வணிகர் சங்க பேரவைத் தலைவர் தா. வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார்.
மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அதன் தலைவர் தா.வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோர் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளனர். இவர்களில் மாதம் 750 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வேதனை தருவதாக உள்ளது.
வணிகப் பயன்பாட்டுக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வணிகர்கள் அரசை வலியுறுத்தி வரும் வேளையில் இந்த மின் உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்கனவே உயர்ந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை மின் கட்டண உயர்வால் மேலும் உயர வாய்ப்பு ஏற்படும்.
எனவே, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் உள்நாட்டு வணிகர்களுக்கும், சுய தொழில் புரிவோருக்கும் மின்வெட்டை அமல்படுத்துகிறது. ஆனால், பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கி வருகின்றது.
அவர்களுக்கு ஒரு யூனிட்க்கு ரூ. 1 வீதம் உயர்த்தினாலே தமிழக மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை பெருமளவு குறைக்க முடியும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications