டாஸ்மாக் தொழிலாளர்களை அரசு மிரட்டுகிறது-தொழிற்சங்க தலைவர்கள் புகார்
மதுரை: ஸ்டிரைக் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், டாஸ்மாக் தொழிலாளர்களை அரசு மிரட்டி வருகிறு என்று தொழிற்சங்க தலைவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அண்ணா தொழிற் சங்கப் பேரவையின் செயலாளர் ஆர். சின்னசாமி, தமிழ்நாடு ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். தியாகராஜன், சிஐடியு தமிழ் மாநில பொதுச் செயலாளர் அ. சவுந்தரராசன், பாட்டாளி தொழிற் சங்கப் பேரவை தலைவர் கே.வி. சிவா ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கை...
டாஸ்மாக் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக குறைந்த தொகுப்பூதியம் வழங்குவதை மாற்றியமைக்க கோரியும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும், சம்பளத்தை உயர்த்திக் தர கோரியும், 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக ஆக்க கோரியும், வார விடுமுறை, 8 மணி நேரமாக வேலை நேரத்தை அமலாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து போராடி வருகின்றனர்.
இதன் மீது தீர்வு காண்பதற்கு டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசும் மறுத்து வருகின்றன.
இனால், எங்களது சங்கங்கள் சேர்ந்து 24.07.2010 திருச்சியில் மாநாடு நடத்தி, கோரிக்கைகளைப் பட்டியலிட்டு அவற்றை அரசுக்கு தெரிவித்திருந்தோம். அரசு மறுக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற் கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்திருந்தோம்.
நியாயமான கோரிக் கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேலைநிறுத்தம் செய்வதில் தொழிலாளர்கள் உறுதியாக இருப்பதை அறிந்து, டாஸ்மாக் கடைச் சாவிகளை ஒப்படைக்குமாறு நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்வதோடு, தொழிலாளர்களிடம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கமாட்டேன் என எழுதிக் கொடு என்று அதிகாரிகளை வைத்து மிரட்டுகிறது.
தற்போது டாஸ்மாக் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தால், மக்கள் நலப்பணியாளர்களையும், கிராம உதவியாளர்களையும் கொண்டு கடைகளை திறந்து விற்பனை செய்யப் போவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், மாவட்ட மேலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேலை வாய்ப்பகத்தில் புதிய தொழிலாளர்களுக்கான பெயர்களைக் கேட்டு வாங்குமாறு கூறியுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த வேலைநிறுத்தம் நடந்தால், அவர்களை நியமித்துவிட்டு, வேலை நிறுத்தம் செய்பவர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக மாவட்ட மேலாளர்கள் தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
இவை தொழிலாளர் விரோத நடைமுறைகள் ஆகும். தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த நடைமுறை கண்டனத்துக்குரியது.
தொழிலாளர்களை அச்சுறுத்தி, ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் அரசு இறங்குவதை தவிரத்து விட்டு, கோரிக்கை மீதான பேச்சு வார்த்தையை துவங்க அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications