காடுவெட்டி குரு மீது குற்றப் பத்திரிக்கை: தி.மு.க.வுடன் உறவு வருமா?
கடந்த மாதம் 28-ம் தேதி வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காடுவெட்டி குரு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் மாநில அரசுக்கு எதிராகவும், வன்னியர்களை தூண்டி விடும் விதமாகவும் பேசியதாக அரியலூர் போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காடுவெட்டி குரு மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையை போலீசார் நேற்று அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மக்களிடம் அரசுக்கு எதிரான உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசுதல், சாதி ரீதியான விரோத உணர்வை தூண்டி அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், அரசின் சட்டங்களுக்கு எதிராக மக்களிடம் விரோத வெறுப்பை ஏற்படுத்துதல், பொது மக்கள் அல்லது ஒரு பிரிவினர் இடையே பீதியை ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளில் காடுவெட்டி ஜெ.குரு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் காடுவெட்டி குரு எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
மேலும், சமீப காலமாக அரசியலில் தி.மு.க. - பா.ம.க. உறவு எதிரும் புதிருமாக இருந்து வந்தது. தற்போது தான் இரு கட்சிகளும் ஓரணியில் வந்தது. இந்த நிலையில் காடுவெட்டி குரு மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் தி.மு.க. - பா.ம.க. உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.