அரசு மருத்துவ மனையில் திடீர் தீ-நோயாளிகள் ஓட்டம்
கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் கைக் குழந்தையுடன் பெண்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் எடுத்தனர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை பின்புறம், பெண்கள் பிரசவ வார்டு கட்டடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்திற்கு எதிரே, பழைய மருத்துவமனையாக செயல்பட்டு வந்த கட்டடத்தில், பழுதடைந்த கட்டில் மற்றும் மெத்தை போன்ற தேவையற்ற பொருட்களை வைத்து பூட்டி இருந்தனர். இந்த நிலையில், அந்த கட்டித்தில் திடீர் என தீ பிடித்தது.
இதைக் கண்டு அதிரிச்சி அடைந்த பிரசவ வார்டு பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் ஓட்டம் எடுத்தனர்.
இது குறித்து தகவல் கடலூர் தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், கட்டடத்திற்குள் இருந்த பழுதடைந்த கட்டில், மெத்தை, மரத்தூண்கள் போன்றவை தீயில் எரிந்து கருகியது.
இதனை, மருத்துவமனை இணை இயக்குனர் ஜெயவீரக்குமார், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் தீ விபத்திற்கு மின் கசிவு தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.