இலங்கையின் போர்க்குற்றத்திற்கான ஆதாரங்களை திரட்டும் மலேசிய துணை முதல்வர்
இதற்காக தனியாக ஒரு குழுவையே அவர் அமைத்துள்ளார். பினாங்கு துணை முதல்வராக இருக்கும் ராமசாமி, மலேசியாவின் ஜனநாயக செயல்பாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார். தீவிர ஈழ ஆதரவாளர். ஈழத்தில் போர் உக்கிரத்தில் இருந்தபோது தமிழ் மக்களைக் காக்குமாறு உலக நாடுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்தவர்.
மேலும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தவும் முயற்சித்தார். இருப்பினும் அவரது முயற்சிகள் பலன் தரவில்லை. ஈழப் போரில் இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகளை கடுமையாக கண்டித்துப் பேசி வருகிறார். மேலும், மத்திய அரசு நடத்திய வெளிநாடு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்றும் புறக்கணிப்பு செய்தார்.
இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்களை திரட்டும் பணியில் குதித்துள்ளார் ராமசாமி. இதற்காக, சர்வதேச தொண்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்துள்ளார். விரைவில் இக்குழு செயல்படவுள்ளதாம்.
அனைத்து போர்க்குற்ற ஆதாரங்களையும் சேகரித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் கொடுக்கவுள்ளாராம் ராமசாமி.